‘நல்ல பண்புகளை ரஜினியிடம்தான் கத்துக்கனும்…!’
ரஜினியை ஒரு முறை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தாலே போதும், காலத்துக்கும் அவரது ரசிகர்களாய் மாறிவிடுவார்கள்.
இத்தகைய அனுபவம் கொண்ட நிறைய பேரை நம்மால் காட்ட முடியும். எனக்குத் தெரிந்து தினமும் எத்தனையோ பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது.
ஷூட்டிங் ஸ்பாட்களில், ராகவேந்திரா மண்டபத்தில், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அல்லது அவர் வீட்டு வாசலில் அவர் வெளியில் வரும் நேரத்துக்காக காத்திருக்கும் தருணங்களில் (இப்போது இதைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்)… இப்படி சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்து அவரைச் சந்தித்து வாழ்க்கையின் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெறுகிறார்கள் நிறைய நண்பர்கள்.
தன்னைத் தேடிவரும் எல்லாரையும் முடிந்தவரை சந்திக்கத் தவறுவதில்லை தலைவர்.
எமது நண்பரும், மருத்துவருமான டாக்டர். தனசேகரன் ஒரு விழாவில் நமது சூப்பர் ஸ்டாரை சந்தித்த அனுபவத்தை காலத்துக்கும் மறக்கமுடியாத ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.
முன்னதாக, டாக்டர் தனசேகரன் பற்றிய சிறு குறிப்பு: ஒரு பிரபல தனியார் மருத்துவமணையில் பணியாற்றி பின் விருப்ப ஓய்வு பெற்று தற்போது தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். பிண்ணனி பாடகர்களில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்றுள்ள பிரபல பாடகர் டாக்டர். கே.ஜே.ஏசுதாஸ் அவர்களின் சிஷ்யர்களில் ஒருவர் தனசேகரன். மேலும் ரஜினியைச் சந்திக்கும் வரை அவர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர் இல்லை என்பதும் குறிப்பிடதக்கது.
ரஜினியைச் சந்தித்த பிறகு அவரைப் பற்றி தான் கொண்ட மதிப்பீடுகளே மாறிப் போனதாகக் குறிப்பிடுகிறார் டாக்டர் தனசேகரன்.
இனி தனசேகரன் உங்களுடன்…
ஒருநாள் நான் ஏசுதாஸ் அண்ணாவை பார்க்க சென்று இருந்தேன். அப்போழுது அவர் எங்கோ அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன், வா! சேகரா! என்று என்னையும் அழைத்துக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டார். நானும் எங்கே என்று கேட்கவில்லை. சென்ற பிறகுதான் தெரிந்தது அது ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படத்தின் வெற்றி விழா பார்ட்டி என்று.
அனைவரும் பார்டியில் ஐக்கியமானோம். திரைப்படத்தில் நடித்து இருந்த அனைவரும் திரண்டு இருந்தனர். அற்புதமான பார்ட்டி அது. ரஜினி காந்த், பிரபு, ராம்குமார், அண்ணா (கே.ஜெ.ஏசுதாஸ்) எல்லாம் ஒரே ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர்.
இடையே அண்ணா என்னை அழைத்து ரஜினி சாரிடம் என்னை இவர் டாக்டர் சேகர், என் சிஷ்யர்களில் ஒருவர் என்று அறிமுகப்படுத்தினார். அடுத்த கணம், அமர்ந்து இருந்த ரஜினி சார் எழுந்து நின்று ‘வாங்க! வாங்க!’ என்று கை குலுக்கி வரவேற்றார். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
‘சார்.. நீங்க மன்னன் படத்திலே நல்ல நடிச்சிருக்கீங்க, படம் சூப்பர்!’ என்றேன்.
உடனே அவர் அடக்கத்துடன், ‘எல்லாம் உங்க ‘அண்ணா’தான் காரணம்’ என்றார்.
‘எனக்கு புரியவில்லை’ என்றேன்.
அதற்கு அவர் அண்ணா அவர்கள் பாடிய, ‘அம்மா என்று அழைக்காத..’ பாடலால்தான் இவ்வளவு பெரிய ஹிட்!’ என்றார்.
எனக்கு ஒரே ஷாக்..
‘ஒரு கதாநாயகனிடம் சென்று உங்க படம் சூப்பர் என்றால் அதற்கு அவர்கள் தற்பெருமையுடன் நான் அப்படி நடித்தேன் இப்படி ரிஸ்க் எடுத்தேன் என்று சொல்ல பார்த்தும், கேட்டும் இருக்கிறேன். ஆனால் இவரோ தன் திரைப்படத்தில் ஒளித்த ஒரு பாடலால்தான் இந்த வெற்றி என்கிறாரே…’ என்று வியந்தேன்.
பிறகு அவர் என்னிடம், ‘சாப்ட்டீங்களா, முதல்ல சாப்பிடுங்க, பிறகு பேசுவோம்’ என்றார். நானும் சாப்பிட்டு விட்டு எப்படி மறுபடியும் அவரிடம் சென்று பேசுவது என்று தயங்கி நின்றிருந்தேன்.
சிறிது நேரம் கழித்து அவரே என்னை அழைத்தார். என்னை பற்றியும், என் குடும்ப நலனையும் கேட்டறிந்தார். தொழிலைப் பற்றிக் கேட்டர். பிறகு பொதுவாக கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அண்ணாவும் நானும் புறப்பட, வாசல் வரை வந்து வழியனுப்பிய விதம் மனதை கவர்ந்தது. ஏசுதாஸ் அண்ணா அவர்களுடன் சென்று அனேக பெரிய திரை நட்சத்திரங்களை எல்லாம் சந்தித்து இருக்கேன். உலக மகா நடிகர்களும் தன்னைத் தேடி வரும் ஒரு விருந்தினரை ஒரு நட்பு நிமித்தமாக கூட வரவேற்க மாட்டார்கள். அப்படி வரவேற்றாலும் அவர்களின் செயற்கைத்தனம் நன்றாகத் தெரியும்.
ஆனால் ரஜினி சாரோ, ஒரு விருந்தினரை அன்புடன் வரவேற்று, ஒரு சகோதரன் போல பரிவு காட்டும் பண்பைக் கண்டு வியந்தேன். புகழின் போதை சிறிதும் அவரிடம் காண முடியவில்லை. நான் சந்தித்தவர்களில் நம்பியார் குருசாமி, ரஜினி சார் இவர்கள்தான் இத்தகைய பண்பை பெற்று இருந்தார்கள் என்றார் டாக்டர் தனசேகரன்.
சும்மாவா பாடினார் சூப்பர் ஸ்டார், “அன்பின் உறவாயிரு! உண்மை மறவாதிரு! 100 காலம் வரை வாழ்வின் வளமாயிரு!”
Monday, September 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment