எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட சூப்பர் ஸ்டார்!"மத்தவங்க நினைக்கிறதை நான் செய்ய மாட்டேன்...
நான் செய்றத மத்தவங்க எதிர்பார்க்கவும் விடமாட்டேன்!"
-இது சுமார் 17 வருடங்களுக்கு முன் நமது சூப்பர் ஸ்டார் உழைப்பாளி திரைப்படத்தில் கூறியது. இன்றுவரை அதை செயலில் காட்டி வருபவர் நிச்சயம் நமது தலைவராக தான் இருக்க முடியும்..
தமிழ்நாடே சூப்பர் ஸ்டாரின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்து கிடந்த 95, 96 வருடங்களில், மற்றவர் தரும் வெற்றியில் தான் பங்கு பெறக் கூடாது என்ற வைராக்கியத்தோடு, அமரர். திரு. மூப்பனார் அவர்களை முன்னிருத்தி கலைஞர் அவர்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெறச் செய்தார். மூப்பனாரின் தன்மானம் கெடாமல் பார்த்துக் கொண்டவர், கூடவே தான் ஒரு 'கிங் மேக்கர்' என்பதையும் அதிரடியாக நிருப்பித்தார்.
பாபா திரைப்படத்தைத் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் சோதனை சோதனை நேர்ந்த சமயத்தில், அவரது அதிரடி அரசியல் பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக, தன்னால் யாரும் நஷ்டப்படக்கூடாது என்று அந்த நஷ்டத்தை ஈடுசெய்து ஒரு ஞானியை போல பொறுமைக் காத்ததோடு, தன் அன்பு ரசிகர்களையும் அவ்வழியே பொறுமை காத்திடச் செய்து வழிநடத்தினார்.
காவேரி பிரச்சனையில் ரஜினி அளவுக்கு வேறு யாருக்காவது சோதனை நேர்ந்திருந்தால் அவர்களால் தாங்கியிருக்க முடியுமா என்பதே சந்தேகம். ஒரு நேரத்தில் திரையுலகமே அவருக்கு எதிராகத் திரும்பியது போன்ற பிரமையை ஏற்படுத்த முயற்சித்து தோற்றது ஒரு கும்பல்... மறு சமயமோ, அவர் கன்னடர்களிடம் கேட்காத மன்னிப்பை கேட்டதாக வெண்டுமென்றே செய்தியாக்கி, குசேலனை சிக்கலுக்குள்ளாக்கி மகிழந்தது இன்னொரு கும்பல்.
இன்றோ... தமிழரும் கன்னடரும் சகோதரர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது உறவு இருக்க வேண்டும். மக்களுக்காக பாடுபடுவோம் என்று கலைஞரும் எடியூரப்பாவும் மாலை மாற்றி போஸ் கொடுக்கிறார்கள்.
இதைத்தானேய்யா எங்க தலைவரும் சொன்னார்... சொல்லிக் கொண்டிருக்கிறார்! இதை இதே தொனியில் சொன்னதற்காகத்தானே நமது தலைவருக்கு எதிராக பெரும் சதி செய்ய முயன்றார்கள்..!
அன்றைய சூழலில் இனியும் பொறுக்க முடியாது என்ற மனநிலை ரசிகர்களிடம் நிலவுவதை அறிந்த சூப்பர் ஸ்டார் தக்க தருணத்திற்காக காத்திருந்து, அவர்களைச் சந்தித்தார். ரசிகர்களும், ஊடகங்களும், ஏன் பொது மக்களும் இந்த முறைக் கண்டிப்பாக ஒரு முடிவை, அறிவிப்பை வெளியிடுவார் என்றே எண்ணினர். ஆனால் அதற்கு மாறாக, தான் இதுவரை மனதில் வைத்து இருந்த செய்தியை மக்களிடமும், ரசிகர்களிடமும் வெளிப்படுத்தினார்.
அது 'அரசியலில் ஜெயிக்க சூழ்நிலையும், சந்தர்ப்புமுமே முக்கியம்' என்பதை எடுத்து கூறி, மேலும் தனது ரசிகர்களுக்கு சமூகத்தில் ஒரு சிறந்த அடையாளம் பெற வேண்டி, முதலில் அவரவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுமாறும், அடுத்து நாட்டு நடப்புகளை கவனித்து கற்று தேரவும் அறிவுறுத்தி எந்திரன் திரைப்படம் முடியும் வரை பொறுமைக் காக்க வேண்டுகோளும் விடுத்தார்.
அதற்கு அடுத்து நடைபெற்ற ஈழ தமிழர்களுக்கான உண்ணவிரத்தில் அனைவரையும் கட்டுப்பாடோடு பேசுமாறு அன்பு கட்டளை பிறப்பிக்க, தலைவர் சற்று ஆவேசத்துடன் தமிழர்களின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைத்து சிங்கள வெறியர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
முன்பு ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்...
சூப்பர் ஸ்டாரிடம் அவரின் நண்பர்கள், நீ ஏன் அடிக்கடி மாறுவேடம் அணிந்து ஊரை சுற்றுகிறீர்கள் என்று கேட்டதற்கு, சூப்பர் ஸ்டார் "அப்போ தான் மக்களுடன் மக்களாக என்னால் பழக முடியும். இந்த வேடம்தான் மக்களின் மனதை, அவர்களின் பிரச்சனையை, அவர்களின் நிலையையை அறிந்துக்கொள்ள உதவுகிறது" என்றாராம்.
இப்படி, தான் செய்வதை மற்றவர்கள் கணிக்கவும் விடாமல், அவர்கள் கணிப்பதை விட அதிகமாகவே மக்களின், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை திருப்திப்படுத்தி வருபவர் சூப்பர் ஸ்டார்.
அவர் இதைத்தான் செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பதே தேவையில்லாததுதான். காரணம் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை முற்றிலும் உணர்ந்த ஞானியைப் போன்றவர் அவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து என்ன செய்வார்...?
இந்த கேள்விக்கு விடை...
அவர் நல்லதைச் செய்வார்... அதையும் அதிரடியாகச் செய்வார், தான் நேசிக்கும் தமிழ் மக்களுக்காக!-ரஜினி ராஜேஷ்